For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சதிக்கு கால் முளைத்து சாதியாகிவிட்டது-ஸ்டாலின்

Google Oneindia Tamil News

நாமக்கல்: சதிக்கு கால் முளைத்து சாதியாகி விட்டது என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் மகளிர் சுய உதவி குழுவினரின் கண்காட்சியி்ல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

சமத்துவபுரம் திறப்பு விழா சிறப்பாக, எழுச்சியோடு நடந்து வருகிறது. ரூ. 24.67 கோடிக்கு மொத்தம் 127 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5கோடியே 24 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1500 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மானியம் ரூ. 10 ஆயிரத்துடன் சேர்த்து வங்கி கடனாக ரூ. 15 கோடி வழங்கப்படுகிறது. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் ரூ. 2 கோடியே 77 லட்சம் மதிப்பில் 8255 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

சமத்துவபுரம் தொடங்கு வதற்கு காரணம் குறித்து நான் உங்களிடம் கூற வேண்டும். 1996ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பு ஏற்றபோது தந்தை பெரியார் நினைவு சமத்துவபுர திட்டத்தை கொண்டு வந்தார்.

மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும், சாதி, மத பேதங்களை கடந்து வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் பெரியார். அவரின் கனவை நனவாக்கும் வகையில் மக்கள் அனவைரும் தமிழனாக, மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்.

அத்தி மரத்தின் உச்சியிலும், அடிமரத்திலும், கிளையிலும் காய்க்கக்கூடிய காய்களை நாம் அத்திக்காய்கள் தான் என்று கூறுகிறோம். அதைப்போல மனிதன் தனது சமுதாயத்தை குறிப்பிட்டு கூறும் நிலை மாற வேண்டும். சாதிகள் ஒழிய வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது, செயல்படுத்த வேண்டும்.

சதிக்கு இடையே கால் முளைத்து சாதி என்று ஆகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக கடந்த 1996முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அப்போது சமத்துவ புரங்கள் திட்டம் செயல் படுத்தப்படாமல் கிடப்பில் கிடந்தது. மேலும் கட்டி முடிக்கப்பட்ட சமத்துவ புரங்களையும் பேணிக் காக்கவில்லை.

இந்த நிலையில் 2006ம் ஆண்டு கலைஞர் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்று பராமரிக்கப்படாமல் உள்ள சமத்துவபுரங்களுக்காக நிதி ஒதுக்கி பணிகளை நிறைவேற்றினார். மீண்டும் தமிழ்நாட்டில் சமத்துவ புரங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்து 95 சமத்துவ புரங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

மேலும் ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சமத்துவ புரங்களிலும் பெரியார் சிலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த விழாவில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பார்வையிட்டேன். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்டி என்ன விலைக்கு விற்கிறோம், வங்கிகள் மூலம் தாங்கள் பெற்ற கடன், அதை தாங்கள் முறையாக செலுத்துகிறோம் என்றெல்லாம் கூறினார்கள்.

1989ம் ஆண்டு முதல்வர் கலைஞர் தர்மபுரியில் மகளிர் சுய உதவிக்குழுவை தொடங்கி வைத்தார், கட்சியின் வளர்ச்சிக்காகவோ, அரசியலில் அவர்களை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்காகவோ சுய உதவிக் குழுக்களை தொடங்காமல் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும், சுயமரியாதை உணர்வுடன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற சூழல் உருவாக வேண்டும் என்பதற்காக சுயஉதவி குழுவை தொடங்கினார்.

இன்று இந்திய அளவில் தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. நேற்ரு கரூரிலும், அதற்கு முந்தைய நாட்களில் விழுப்புரம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கெல்லாம் சென்று வந்தேன். அங்கெல்லாம் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

இந்த விழாவிற்கு 100-க்கு 99? சதவீதம்பேர் வந்துள்ளீர்கள். நீங்கள் கட்டுப்பாட்டுடன் அமர்ந்து உள்ளீர்கள்.இந்த கட்டுப்பாடு உங்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டில் 4 லட்சத்து 651 குழுக்கள் உள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 65 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஊரக அளவில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 775 குழுக்களும், நகர அளவில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 926 குழுக்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுக்களின் மொத்த சேமிப்பு தொகை ரூ. 2 ஆயிரத்து 322 கோடி. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ. 5 ஆயிரத்து 338 கோடி.

கலைஞர் 5வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 80 ஆயிரத்து 900 மகளிர் குழுக்கள் சுழல் நிதி பெற்று உள்ளனர். 2009-2010ல் மட்டும் 3 ஆயிரத்து 683 குழுக்களுக்கு இந்த சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 4188 கோடி ரூபாய் வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் சுழல் நிதியாக ரூ. 76 கோடியே 2 லட்சமும், வங்கி கடனாக ரூ. 1644 கோடியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

மகளிர் குழுக்களில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. 2008-2009-ம் ஆண்டில் இந்தியாவில் 10 லட்சத்து 81 ஆயிரம் குழுக்களுக்கு ரூ. 11 ஆயிரத்து 132 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரத்து 485 குழுக்களுக்கு ரூ. 2184 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 21 சதவீத கடன் தொகை தமிழகத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் வங்கிக்கடன் பெறுவதில் 100க்கு 99 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடனை முறையாக செலுத்தி விடுகிறார்கள்.

இந்தியன் வங்கி என்னிடம் ஒரு கணக்கை கொடுத்துள்ளது. அவர்கள் தேசிய அளவில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 825 குழுக்களுக்கு ரூ. 1864 கோடியே 87 லட்சம் வழங்கி உள்ளார்கள். இதில் தமிழகத்திற்கு மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குழுக்களுக்கு ரூ. 1159 கோடி வழங்கி இருக்கிறார்கள். 62 சதவீத கடனை தமிழகத்திற்கு மட்டுமே வழங்கி உள்ளார்கள். காரணம் அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை தான்.

பெண்கள் முன்னேற்றத் திற்காகவும், ஏழை- எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நீங்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X