தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு - ஹில்லாரி பேச்சுக்கு அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன்: சமீபத்தில் இலங்கை அரசின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறவில்லை என்று அமெரிக்கா பல்டி அடித்துள்ளது.
சமீபத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஹில்லாரி கிளிண்டன், இலங்கைப் போரின்போது தமிழ்ப் பெண்களை கற்ழிப்பதையும், பலவந்தப்படுத்துவதையும் ஒரு ஆயுதமாக ராணுவம் கையாண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஹில்லாரியின் பேச்சு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அமெரிக்க அரசும், சர்வதேச மனித உரிமைகள் குழுக்களும், கடந்த ஆண்டுகளில், இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கற்பழிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக அரசுத் தரப்பில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் பெருமளவில் கற்பழிப்புக்குள்ளானதாக தகவல்கள் பெறப்பட்டன.
இருப்பினும் 2006ம் ஆண்டு முதல் இதுநாள் வரையிலான சமீபத்திய போர்க் காலத்தில் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் போன்றவற்றுக்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. அதேசயம் உலகின் போர் நடைபெறும் பிற பகுதிகளில் அவை பெருமளவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இந்த விளக்கம் தற்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில், இலங்கையில் அமைதி வலுப்படவும், மனித உரிமைகள் காக்கப்படவும் இலங்கை அரசு உறுதியான, தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஹில்லாரி கிளிண்டன் நம்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.