இடம் தராமல் இழுத்தடிக்கும் ஜார்க்கண்ட், ஒரிசா - மிட்டல் மிரட்டல்
இந்த இரு மாநிலங்களிலும் 20 பில்லியன் முதலீட்டில் உருக்காலைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார் மிட்டல். இதற்காக இரு மாநில அரசுகளிடமும் இடம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இடத்தைக் கொடுப்பதில் இரு மாநில அரசுகளும் தாமதம் செய்து வருகின்றன.
இதுகுறித்து மிட்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களில் எங்களது இரு கிரீன்பீல்ட் ஆலைகள் அமைப்பது தொடர்பான பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும், இடத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து இழுபறியும், தாமதமும் நிலவுவதால் வேறு மாநிலங்களைப் பார்க்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு வருகிறோம்.
இருப்பினும் இந்தியாவில் முதலீடு செய்வது என்ற எங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் இரும்பின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முக்கியமான நாடு. மேலும், ஆர்சலர் - மிட்டல் நிறுவனத்தின் நீண்ட கால மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.