தங்க இடம் தராமல் அவமானப்படுத்தப்பட்ட பி.டி.உஷா- அழுகை
டெல்லி: போபாலில் தொடங்கிய தேசிய தடகளப் போட்டிக்குச் சென்ற முன்னாள் தடகளப் புயல் பி.டி.உஷாவுக்கு தங்கக் கூட இடம் கொடுக்காமல் அதிகாரிகள் அவமானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கண்ணீர் விட்டு அழுதார் பி.டி.உஷா.
பய்யோலி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்டவர் பி.டி.உஷா. தேசிய அளவில் தடகளத்தில் அவர் ஏற்படுத்தி வைத்த சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், போபாலில் தொடங்கிய தேசிய தடகளப் போட்டியில் பயிற்சியாளராக சென்றுள்ளார் பி.டி.உஷா. ஆனால் அவருக்கு தங்க தனி இடம் கொடுக்கப்படவில்லை. மாறாக ஐந்து பேர் தங்கியுள்ள ஒரு அறையில் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளார்.
எனக்கு நல்ல அறையாக கொடுங்கள் என்று கேட்டபோது அதற்கு அதிகாரிள் மறுத்து விட்டனராம். இதையடுத்து செய்தியாளர்கள் முன்பு கண்ணீர் விட்டு அழுதார் பி.டி.உஷா.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது எங்கே போவது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போட்டிக்கு அவர்கள்தான் பயிற்சியாளராக வருமாறு அழைத்தார்கள். நானும் வந்தேன். ஆனால் இப்போது அறை கூட தராமல் அவமதித்துள்ளனர். அமைச்சர் கில் இங்குதான் இருக்கிறார். இருந்தும் எனக்கு நிவாரணம் இல்லை. நான்கு வீராங்கனைகளுடன் என்னைத் தங்கச் சொல்கிறார்கள். நான் எங்கு போவது என்று கூறிக் கொண்டே அழுதார் உஷா.
ஏற்கனவே தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் சரியான வசதிகள், தங்குமிடம் செய்து தரப்படவில்லை என்று உலக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இப்போது பி.டி.உஷாவுக்கும் அப்படி ஒரு அவமானம் நேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications