ரேஷன் ஊழியர்களுக்கு 20% போனஸ்
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் “சி"மற்றும் “டி" பிரிவு பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் ஆகியோருக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை சேர்த்து 20 சதவீத போனஸ் வழங்கிடவும்,
நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தலா ரூ. 2,000 கருணைத்தொகை, 2008-2009ம் ஆண்டில் 30 நாட்களுக்குக் குறையாமல் பணியாற்றிய தற்செயல் பணியாளர்களுக்கும், திறந்த வெளி சேமிப்பு மையங்கள் மற்றும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் ஆகிய வற்றில் பணிபுரியும் பருவ கால சுமை தூக்கும் பணியாளர்களுக்குத் தலா ரூ. 1,500 கருணைத்தொகை என 2008-2009ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகப் பணியாளர்கள் 32,174 பேருக்கு மொத்தம் ரூ. 12.59 கோடி இந்த ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.