விபச்சார வழக்கில் கைதான புவனேஸ்வரி புர்கா அணிவதா - முஸ்லீம் பெண்கள் புகார்
சென்னை: விபச்சாரம் செய்து போலீஸால் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி புர்கா அணிந்து வந்ததற்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முஸ்லீம் பெண்கள் பெரும் திரளாக திரண்டு சென்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தனர்.
விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் குறிப்பாக நடிகைகள் முஸ்லீம் சமுதாயத்தினர் அணியும் புர்காவை அணிந்து கொண்டு முகத்தைக் காட்டாமல் செல்வது தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் பங்களாவில் ஆள் வைத்தும், தானாகவும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த புவனேஸ்வரியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் உள்ளிட்ட பெண்களும் புர்காவுடன் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
முஸ்லீம் சமுதாயத்தின் முக்கிய அங்கமான புர்காவை, விபச்சாரம் செய்த புவனேஸ்வரி அணிந்து சென்றதற்கு பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஏராளமான முஸ்லிம் பெண்கள் காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பில் பெரும் திரளான பெண்களும், ஆண்களும் ஆணையரை சந்தித்துப் புகார் கொடுத்தனர்.
அதில், கடந்த 2.10.2009 அன்று சென்னையில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரியை போலீசார் அழைத்து வரும்போது புவனேஸ்வரி பர்தா உடை அணிந்து வந்தார்.
உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாகவும், கண்ணியமாகவும் கருதக்கூடிய பர்தா என்ற உடையை, விபசார வழக்கில் கைதான நடிகை புவனேஸ்வரி அணிந்து வந்தது தமிழக இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதுபோல பல குற்றங்களில் கைது செய்யப்படுபவர்கள் புனிதமான பர்தாவை அணிந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இது கண்டிக்கத்தக்கது. இனிமேல் விபசாரம் போன்ற குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் புனிதமாக கருதப்படும் பர்தா உடையை அணிந்து வருவதை போலீசார் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் பிரிவு பொறுப்பாளர்கள் மசூதா ஆலிமா மற்றும் ஏ.நஜிமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்படி விபச்சாரப் பெண்கள் புர்கா அணிந்து வருவதை எதிர்த்து எதிர்காலத்தில் எங்கள் அமைப்பு சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.