போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி - என்எல்சி ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
நெய்வேலி: என்எல்சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவன நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை தொடர்பான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பான ஸ்டிரைக் அறிவிப்பை அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன.
போனஸ் மற்றும் ஊக்கத் தொகை குறித்த தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நிரந்தரத் தொழிலாளர்கள் விதிப்படி வேலை போராட்டத்தை மேற்கொண்டனர். நேற்று காலை தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. இருப்பினும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இருப்பினும் இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. எனவே காலையில் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கவில்லை. ஒரு வேளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையிலும் தோல்வி ஏற்பட்டால் இன்றே ஸ்டிரைக்கை தொழிலாளர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
நிரந்தரத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் குதிப்பதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.