உ.பி. தலைமை செயலர் மீது அவமதிப்பு வழக்கு-சுப்ரீம் கோர்ட்
சென்னை: லக்னோவில் நினைவிடங்கள், சிலைகள் தொடர்பான கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டும் அதை மீறி தொடர்ந்து செயல்படுத்திய செயலுக்காக உ.பி. மாநில தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
லக்னோவில் பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷிராம், கட்சியின் சின்னமான யானை ஆகியவற்றுக்கு சிலைகள் வைத்தும், தனக்கும் சிலைகள் அமைத்தும் மக்களின் வரிப்பணத்தை ஆயிரக்கணக்கான கோடியில் செலவிட்டு மாயாவதி அரசு நடத்தி வந்த நினைவிடங்கள், பூங்காக்கள் மற்றும் சிலைகள் அமைக்கும் பணிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இடைக்கால தடை விதித்தது.
ஆனால் அதையும் மீறி தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இதுகுறித்து கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மாயாவதி அரசுக்கு நேற்று முன்தினம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இது மாநில சட்டசபை அல்ல, இங்கு அரசியல் நடத்தக் கூடாது என்று அது கடுமையாக எச்சரித்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உ.பி. மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக நீதிபதிகள் அகர்வால், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் வக்கீலின் வாதம் மற்றும் உ.பி. மாநில தலைமைச் செயலாளர் மற்றும் பிறர் தாக்கல் செய்த விளக்க மனுக்களைப் பரிசீலித்த பின்னர் இவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தேவையான முகாந்திரம் இருப்பதாக கருதுகிறோம்.
எனவே உ.பி. மாநிலத் தலைமைச் செயலாளருக்கு ஏன் கோர்ட் உத்தரவை மீறி நடந்ததற்காக உங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
நவம்பர் 4ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.