கழிவு நீர் மாசு - திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ. 55 கோடி அபராதம்
சாயக் கழிவு நீரால் மாசுபட்டுப் போன நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் வகையில் சாயப்பட்டறைகளை மூட உத்தரவிடக் கோரி நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நொய்யல் ஆற்றை தூர் வாரவும், தூய்மைப்படுத்தவும் திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் ரூ. 55 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இதை எதிர்த்து சாயப்பட்டறை அதிபர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீலை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ். செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு...
இயற்கையை மாசுபடுத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்களை நிலை நிறுத்த வேண்டியது அவசியம்.
திருப்பூர் தொழில் சூழல், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறது. நாட்டுக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. அதேசமயம், ஒரு ஆற்றையே சாயப்பட்டறை நிறுவனங்கள் மாசுபடுத்தியுள்ளது ஏற்க முடியாது. அதற்கான விலையை அந்த நிறுவனத்தினர் தந்தாக வேண்டும்.
சாயப்பட்டறை நிறுவனங்களின் செயலால் ஏராளமான விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களால் பயிரிடவே முடியாத அளவுக்கு நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த அபராதத் தொகையை 3 மாதங்களுக்குள் திருப்பூர் சாயப்பட்டறை அதிபர்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.