திகார் கைதிகளுக்கு தொலைபேசி வசதி-டெல்லி அரசு
டெல்லி: திகார் சிறை கைதிகளுக்கு தொலைபேசி வசதி செய்து தரப்படும் என உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஷிவானி பட்நாகர் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிகாந்த் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி, சமீபத்தில் சிறையை பார்வையிட வந்த நீதிபதி ஒருவரிடம கடிதம் ஒன்று கொடுத்தார்.
அதில், சிறையில் தனிமையில் இருப்பதால் பல கைதிகள் மன அழுத்தம் மற்றும் மனநிலை பாதி்ப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சிறையில் தொலைபேசி வசதி செய்து தாருங்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு இதை விரைவில் பெற்று தர வேண்டும் என கேட்டிருந்தார்.
இதையடுத்து நீதிபதி அந்த கடிதத்தை மனுவாக டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் எஸ் முரளிதரன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முக்தா குப்தா, சிறையின் பாதுகாப்பு கருதி தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் தொலைபேசி இணைப்புகள் தயாராகிவிடும் என்றார்.