லெனின் கைதுக்கு பத்திரிக்கையாளர் அமைப்புகள் கண்டனம்
சென்னை: தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு செய்தியாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சென்னை சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, போலீசார், அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்த விதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஜனநாயக விதிமுறைகளை மீறுவதாகும். போலீசாரின் இந்த நடவடிக்கை பத்திரிகையையும், பத்திரிகையாளர்களையும் மிரட்டுவதாக உள்ளது.
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம்:
தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை, அத்துமீறியும், அவசியமின்றியும் தமிழக போலீசார் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்பிரச்னை தொடர்பாக, தினமலர் பத்திரிகை வருத்தம் தெரிவித்த பிறகும், கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.
அத்துமீறிய போலீசார் மீது, உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனினை, நிபந்தனையின்றி விடுதலை செய்யாவிடில், போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பிரஸ் கிளப், பத்திரிகையாளர் சங்கம்:
லெனின் கைது செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “காவல் துறையினரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. 'தினமலர்" செய்தி ஆசிரியர் லெனினை விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று பிற்பகல் பிரஸ் கிளப்பில் சிறப்புக் கூட்டம் நடக்கிறது.
ராமநாதபுரம், நாகர்கோவில், ஈரோடில் ஆர்ப்பாட்டம்...
இதற்கிடையே, லெனின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து ராமநாதபுரத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் பிரஸ் கிளப் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரஸ் கிளப் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இதில் தினமலர், தினமணி, ராஜ் டிவி, ஜெயா டிவி, ஜீடிவி, எஸ்டிவி, தமிழோசை உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் டிவிகளைச் சேர்ந்த நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள பிரஸ் கிளப்கள், லெனின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
மேலும், இந்த நகரங்களின் பிரஸ் கிளப்கள் இணைந்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.