ரயிலில் பட்டாசுகளைக் கொண்டு செல்லத் தடை - மீறினால் சிறை
மதுரை: ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்லக் கூடாது. இதுபோன்ற வெடிபொருட்களை கொண்டு செல்வோர் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
சோழவந்தான் ரயில் நிலையத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதுரைக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் வந்தார். அரசு பொது மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்ளிட்டோரை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சோழவந்தான் ரயில் நிலையம் சென்ற அவர் அங்கு வெடிவிபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தீபாவளி பண்டிகையின் போது இது போன்று பட்டாசு பொருட்களை மறைத்து சிலர் ரயிலில் கொண்டு வருகிறார்கள். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதனை படையினர் உள்ளனர். அவர்கள் இனி இது போன்று பொருட்களை கொண்டு வருபவர்களையும் கண்காணிப்பார்கள்.
ரயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். முதல் கட்ட விசாரணையில் பட்டாசு வெடி வெடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது.
ரயில்வே சட்டப்படி ரெயில்களில் வெடி பொருட்களை கொண்டு செல்வது குற்றம். இந்த குற்றத்திற்கு 6 வருடம் வரை ஜெயில் தண்டனை விதிக்க இடம் உள்ளது. சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்றார்.
இதற்கிடையே, சோழவந்தான் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.