32 பேருக்கு தலா ரூ. 10,000 உதவி-முதல்வர் வழங்கினார்
சென்னை: மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு கலைஞர் அறக்கட்டளை சார்பில் தலா ரூ. 10 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முதல்வர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ. 5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டித் தொகையினை கொண்டு ஏழை எளியோர்க்கு உதவி தொகை 2005 நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007ல் திறந்து வைத்த முதல்வர், கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
தற்போது மீதமுள்ள ரூ. 4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் கிடைத்த வட்டி தொகை 32 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் விதம் மொத்தம் ரூ. 3.2 லட்சம் நிதியை நேற்று முதல்வர் வழங்கினார். இதற்காக தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பணத்தை செலவழித்து சென்னை வர வேண்டியிருப்பதால், விரைவில் இந்த பணத்தை காசோலையாக அவர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்கிறது.