சங்கரன்கோவில் அருகே மின்னல் தாக்கி 2 பேர் பலி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வெவ்வெறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் பள்ளி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் குமார். அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று தனது தாய் தாமரையுடன் கயத்தார் செல்லும் சாலையில் விறகு எடுக்க சென்றான். அப்போது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையோர மரத்தடியில் தாயும், மகனும் ஒதுங்கினர். அப்போது மின்னல் தாக்கியதில் கு்மார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தான். தாய் கண் முன்னாலேயே மகன் இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த மாடசாமி மனைவி சின்னதாய். இவர் நேற்று மாலை தேவர்குளத்திலுள்ள இவரது தோட்டத்தில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் அவர் அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கினார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சின்னதாய் பலியானார்.
இந்த இரு சம்பவம் குறித்து தேவர் குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.