ஸ்டாலின் நாளை முதல் விருதுநகர், நெல்லையில் 3 நாள் பயணம்
சென்னை: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை விருதுநகர் வருகிறார்.
இது குறித்து துணை முதல்வரின் உதவியாளர் க.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை..
துணை முதல்வர் நாளை 12.10.09ம் தேதி விருதுநகர் செல்கிறார். மாலை 4 மணிக்கு துலுக்கப்பட்டியில் இருக்கும் திமுக இளைஞரணி விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
மறுநாள் 13ம் தேதி காலை 10 மணிக்கு ராதாபுரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தையும், 10.30 மணிக்கு கூடங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலையையும் திறந்து வைக்கிறார்.
முத்துவேலர் - அஞ்சுகம் அம்மாள் பஸ் நிலையம்..
பின்னர் 11 மணிக்கு ராதாபுரம் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மாள் புதிய பேருந்து நிலைய சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு சங்கர் நகர் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை தொழில்மயமாக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
14ம் தேதி குற்றாலத்தில்...
14ம் தேதி காலை 9.30 மணிக்கு குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
காலை 10.30 மணிக்கு தென்காசி ஐ.சி. ஈஸ்வரம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் இதர திட்ட பணிகள் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு கடையநல்லூரில் அரசு புதிய மருத்துவமனை கட்டிட திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது