அனில் அம்பானியின் பேச்சை எப்படி நம்புவது? - முகேஷ்
சமாதானமாகப் போகலாம் என்று முகேஷ் அம்பானிக்கு, அனில் அம்பானி அழைப்பு விடுத்துள்ளார். நினைத்தால் சில வாரங்களிலேயே அனைத்தையும் சரி செய்து கருத்து வேறுபாடுகளை நீக்கி விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனிலின் இந்த அழைப்புக்கு முகேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், அனில் சொல்வதை எப்படி நம்புவது என்றும் கேட்டுள்ளார் முகேஷ் அம்பானி.
இதுகுறித்து முகேஷ் அம்பானியின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இது நிச்சயம் சாதகமான நடவடிக்கைதான், மாற்றம்தான். அனில் அம்பானியின் குழுமம், ரிலையன்ஸ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொண்டு வந்த எதிர்மறையான போக்கில் மாற்றம் தெரிவதை வரவேற்கிறோம்.
ஆனால், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தினரின் செயல்பாடுகள், நடத்தை, இதை நம்புவதற்கு கடினமாக்குகிறது. அனில் அம்பானி மாறி விட்டார் என்பதை ஏற்பதற்கு, அவரது நிறுவனத்தின் நடத்தை இடையூறாக இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தலைவருக்கும் எதிராக அனில் அம்பானி அவதூறான பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார்.
சமீப மாதங்களில் வரலாறு காணாத வகையில் இந்த அவதூறுப் பிரசாரம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இந்திய தொழில்துறை காணாதது இது.
மேலும், தனது மூத்த சகோதரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியை, தொடர்பு கொள்ள இன்னும் மீடியாவையே அனில் நம்பியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அவர் நினைத்தால் முகேஷ் அம்பானியை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை இருந்தும், தனது சமாதான அழைப்பை ஊடகங்கள் மூலமாக அவர் கொடுத்திருப்பது வேதனை தருகிறது.
சட்டப்பூர்வான பிரச்சினைகள், வழக்குகள், ஒரு குடும்பப் பிரச்சினை அல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானதல்ல. இது ஆயிரக்கணக்கான பங்குதாரர்களுக்குச் சொந்தமானது. துணை நிறுவனங்களுக்குச் சொந்தமானது. அவர்கள்தான் இந்த அளவுக்கு ரிலையன்ஸ் வளர்ந்து நிற்கக் காரணம். மேலும், இந்த நிறுவனம் இந்த நாட்டின் சொத்தாகும்.
இரு நிறுவனங்களுக்கும், இரு சகோதரர்களுக்கும் இடையிலான அனைத்து நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளையும் கோர்ட் மூலம்தான் தீர்க்க முடியும். கோர்ட்தான் இதில் தீர்ப்பைத் தர முடியும்.
அனைத்துப் பிரச்சினைகளையும் கெளரவமான எண்ணத்தோடு இருந்தால்தான் தீர்க்க முடியும். எனவே அனில் அம்பானி, உணர்ச்சிவசப்படாமல், நடவடிக்கையின் மூலம் தனது மாற்றத்தை நிரூபிக்க முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.