அடகு கடையில் ரூ. 30 லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடகு கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று ரூ. 30 லட்சம் மதிப்புடைய 300 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், திருவண்ணாமலை சாலையில் உள்ள கெடார் கிராமத்தில் அடகு மற்றும் துணி கடை வைத்திருப்பவர் பங்காரு செட்டியார். நேற்று வழக்கம் போல் வியாபார முடித்து கடைகளை இழுத்து மூடிவிட்டு சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 300 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்றது.
காலையில் கடையை திறந்த பங்காரு செட்டியார் நகை, பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீஸாருக்கு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் சகிதம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.