பெரம்பலூரில் பெண் கற்பழித்து கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனுரை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி முருகாம்பாள். தினமும் அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துவிட்டு வருவார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் ஆடு மேய்க்கச் சென்ற அவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் அவரை பல இடங்களிலும் தேடினார். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் பாடாலூர் அருகே உள்ள கருங்காடு என்னுமிடத்தில் கழுத்து அறுக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் அது முருகம்பாள் என்பதை உறுதி செய்தனர்.
மேலும், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.