நீதிபதி பி.டி.தினகரன் நிலம்: ஆய்வு செய்த தாசில்தாருக்கு போனில் மிரட்டல்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலும் ஒரு சிக்கல் அவருக்கு எழுந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரான பி.டி.தினகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்தார். இதையடுத்து 2008ம் ஆண்டு அவர் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிகக்ப்பட்டார்.
சமீபத்தில், பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குவதற்கான பரிந்துரையை நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குழு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் தனது சொந்த மாவட்டமான திருவள்ளூரில் வருமானத்தை மீறி பெருமளவிலான நிலத்தை தினகரன் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தினகரனின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பிய அறிக்கையில், நீதிபதியின் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கான வேலிகளை நீக்க முயற்சிகள் நடந்தது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாசில்தாருக்கு மிரட்டல்...
இந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கச் சென்ற தாசில்தாரை யாரோ சிலர் செல்போன் மூலம் மிரட்டியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் இருவர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வேலிகள் அகற்றப்பட்டிருப்பது உண்மை என்று தெரிய வந்தது. மேலும், அந்த அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டலும் வந்தது என்றார்.
தனக்கு மிரட்டல் வந்தது உண்மைதான் என்று ஆய்வு செய்த அதிகாரிகளில் ஒருவரான தாசில்தார் ஆர்.விஜயராகவலு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிராமத்திற்கு நாங்கள் சென்றவுடன், அந்த சொத்துக்களின் நிர்வாகி எனக் கூறப்படும் ஒருவர் என்னிடம் வந்து செல்போனைக் கொடுத்து ஒருவருடன் பேசுமாறு கூறினார். அந்தப் பக்கம் பேசிய நபர், நான் ஒரு நீதிபதி, தவறான அறிக்கை கொடுத்தால் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினார் என்றார்.
இந்த விவகாரம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிக்குமார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.