ரூ. 75 லட்சம் சிங்கப்பூர் கடத்தல் தங்கம் சிக்கியது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 5.5 கிலோ எடை கொண்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி சமயத்தில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வழியாக பலர் தங்க நகைகள் கடத்தப்பட இருப்பதாக சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைதத்து.
இதையடுத்து அவர்கள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகள் 18 பேர் மீது சுங்க துறையினருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்களது பைகளில் சுமார் 200 முதல் 300 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. சுங்கா இலாகாவினர் அவர்களிடம் மேலும் விசாரிக்கையில் அவர்கள் அனைவரும் இது தங்களுடையது அல்ல என்றும், யாரோ ஒரு நபர் விமான நிலையத்தில் இதை கொடுத்தார்.
இவற்றை சென்னை விமான நிலையத்துக்கு வரும் ஒருவரிடம் ஒப்படைத்தால் ரூ. 5 ஆயிரம் தருவதாக கூறினார். சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வரும் தாங்கள் இந்த பணத்துக்காக ஆசைப்பட்டு அதை வாங்கி வந்ததாக கூறினர்.
இதை தொடர்ந்து வந்த மலேசியா மற்றும் கொழும்பு விமானத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 4 பேர் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதையும் சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் ஒரு நாள் இரவில் மட்டும் சுங்க இலாகாவினர் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள 5.5 கிலோ தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் பிடிபட்ட 22 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.