அதிமுகவுடன் நிரந்தர கூட்டணி எதுமில்லை-கம்யூ.
சென்னை: அதிமுகவுடன் நாங்கள் தொகுதிப் பங்கீடு மட்டுமே வைத்துக் கொண்டோம். அதுவும் லோக்சபா தேர்தலோ முடிந்து போய் விட்டது என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்.
அதே நேரத்தில் கூட்டணி குறித்த ஜெயலலிதாவின் பேச்சுக்கு தான் பதிலளிக்கவே விரும்பவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் இருக்கிறார்களா என்று நேற்று செய்தியாளர்கள் ஜெயலலிதாவிடம் கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடமே கேளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜன் கருத்து தெரிவிக்கையில், முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கூட்டணி என்பது வேறு, தொகுதி உடன்பாடு என்பது வேறு. நாங்கள் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடுதான் கொண்டிருந்தோம். அதுவும் கூட லோக்சபா தேர்தலோடு முடிந்து விட்டது.
சட்டசபை இடைத் தேர்தலின்போது அதிமுக போட்டியிடவில்லை, நாங்கள் போட்டியிட்டோம். எங்களை அவர்கள் ஆதரிக்கவில்லை. அதேபோல உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது, ஆனால் நாங்கள் ஆதரிக்கவில்லை.
இப்போது இரு கட்சிகளுக்கும் இடையில் எந்தவிதமான கூட்டணியோ அல்லது தொகுதி உடன்பாடோ இல்லை.
மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் உள்ளதைப் போல அதிமுகவுடன் எங்களுக்கு நிரந்தரமான கூட்டணி எதுவும் கிடையாது என்றார் வரதராஜன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், எப்போதுமே தமிழகத்தில் தேர்தல் உடன்பாடுதான் ஏற்படுவது வழக்கம். அதைக் கூட்டணி என்று கூற முடியாது. ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கு கருத்து தெரிவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை என்றார் தா.பாண்டியன்.
இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் மிஞ்சியுள்ள ஒரே அரசியல் கட்சி மதிமுக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.