காங். கூட்டணி எம்.பி.க்களை மட்டும் கருணாநிதி அனுப்பியது தவறு - நெடுமாறன்
சென்னை: இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களை மட்டும் அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனிப்பட்ட கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுவிக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற முறையில் பக்கத்து நாட்டு அதிபரால் அனுப்பப்பட்ட அழைப்பை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரிசீலித்திருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க உதவும் வகையில் இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்களை மட்டும் அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும்.
தவறை திருத்திக் கொள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
"தமிழகத்தில் நமக்குள்ளே மோதிக்கொண்டுதானே இலங்கைத் தமிழர்களிடையே சகோதர யுத்தத்துக்கு வழிவகுத்து, இன்றைய அவலநிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை இனியாவது சிந்திக்க வேண்டாமா?' என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கியுள்ளார்.
"போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் இராஜினாமா செய்வார்கள்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தன்னிச்சையாக கைவிட்டது யார் என்பதற்கு முதல்வர் பதில் கூற வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.