மீண்டும் ஆளெடுப்பு வேலைகளில் தீவிரமாக இறங்க ஆரம்பித்துள்ளன நாட்டின் பெரிய ஐடி நிறுவனங்கள்.
இன்போஸிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் நாட்டிலுள்ள பெரிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் எஞ்ஜினியரிங் மற்றும் நிர்வாகவியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளன.
பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களெடுப்பதையே தவிர்த்துவிட்டன. இன்று மெல்ல மெல்ல நிலைமை சகஜமாகத் துவங்கியிருப்பதாக தொழில் நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான நிறுவனங்கள் முழு வீச்சில் புதியவர்களை வேலைக்கு எடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கு முன்னோட்டம் கூறுவது போல, ஐடி நிறுவனங்களான இன்பேஸிஸ் மற்றும் விப்ரோ போன்றவை பொறியியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரிகளை நோக்கி மீண்டும் செல்லத் துவங்கிவிட்டன.
ஒவ்வொரு கல்லூரியிலும் திறமையான மாணவர்கள் தலா 50 பேரை தேர்வு செய்யவுள்ளன இந்த நிறுவனங்கள்.
'குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆட்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த மாத நிலவரப்படி, பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கில் பணியாளர் தேவை. ஆளெடுப்புப் பணியில் உதவக் கோரி இன்போஸிஸ் போன்றவை எங்களை நாடியுள்ளன', என்கிறார் டிஎம்ஐ நெட்வொர்க்கின் வெங்கட் சுப்பிரமணியன்.
அக்சன்சர் போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் புதிய ஆட்கள் நியமனத்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முன்னணி ஐஐடி (IIT) மற்றும் ஐஐஎம் (IIM) போன்றவற்றை தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் அணுகி வருவதை இந்தக் கல்வி மையங்களின் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
"முன்பை விட இப்போது நிலைமை பிரகாசமாக உள்ளது. எத்தனை பேர் வேண்டும் என்று இந்த பெரிய நிறுவனங்கள் குறிப்பாகச் சொல்லவில்லை. ஆனால் மிக அதிக தேவை இருப்பது மட்டும் தெரியும்" என்கிறார் கொல்கத்தா ஐஐஎம் சேர்மன் பிரபுல்லா அக்னிஹோத்ரி.
எப்படியும் இந்த ஆண்டு மட்டுமே 25 சதவிகிதம் புதியவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தில் உள்ளன பெரிய நிறுவனங்கள் என்கிறது அவுட்லுக் சர்வே.
எப்படியோ, செழிப்புக்கு திரும்பினா சந்தோஷம்!