ஜார்க்கண்ட் -ஆதிவாசி பெண்கள் மீதான 1 லட்சம் வழக்குகள் அதிரடி வாபஸ்
டெல்லி: நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், மக்களின் நம்பிக்கையைப் பெறும் பொருட்டு, அம்மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்கள் மீது தொடரப்பட்ட கிட்டத்தட்ட 1 லட்சம் வழக்குளை மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது.
மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.
ஆதிவாசி மக்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். சிறு சிறு வழக்குகள் போடப்பட்டுள்ளதால், ஆதி வாசி மக்கள் காவல்துறையினரின் விசாரணைக் கொடுமைக்குள்ளாகும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். எனவே இதுபோன்ற வழக்குகளை வாபஸ் பெறலாம் என்று மாநில ஆளுநர், உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தார்.
காடுகளில் பழங்கள் பறித்தல், மரம் வெட்டுதல், காடுகளில் ஆடு, மாடுகளை மேய விடுதல், வேட்டையாடுதல், ரிசர்வ் காடுகளுக்குள் அனுமதியின்றி நுழைதல் போன்ற சிறு சிறு வழக்குகள் ஆதிவாசிப் பெண்கள் மீது தொடரப்பட்டிருந்தது. இதுபோன்ற கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.