அருணாச்சல் 72%, ஹரியாணா 70%, மகா. 60%- வாக்குப் பதிவு
மும்பை: அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணாவில் 70, மகாராஷ்டிராவில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நேற்று இந்த மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடந்தது.
மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு காலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த மாநிலத்தில் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
பாஜக-சிவசேனை ஒரு அணியாகவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் வேதிகே தனித்தும் போட்டியிடுகின்றன.
துவக்கத்தில் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு மாலையில் கலைகட்டியது. முடிவில் அங்கு 60 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.
அங்கு சில பகுதிகளில் நக்சைலட்டுகள் தாக்குதல் நடத்தினர். கட்சிரோலி, சந்திரப்பூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பை மீறி துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.
நக்சல் பகுதியில் 55% வாக்குப் பதிவு...
இந்நிலையில் கட்சிரோலி மாவட்டம் காம்தலா கிராமத்தில் உள்ள வாக்குசாவடிகளில் சிலவற்றை நக்சல்கள் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். வாக்குச் சாவடிகளில் மாட்டி கொண்ட தேர்தல் அதிகாரிகளை கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று மீட்டனர்.
இருந்த போதிலும் இப்பகுதியில் 55 சதவீதம் மக்கள் வந்து வாக்களித்தனர்.
அருணாச்சல் அதிகம்...
60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல் பிரதேசத்தில் தான் அதிகபட்ச வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 72 சதவீத மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை சிறப்பாக செய்துள்ளனர்.
ஹரியாணாவில் 70 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது. அங்கு கைய்தால் மாவட்டத்தில் கூல்கா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தில்லு ராம் மற்றம் சுயேட்சை வேட்பாளர் குல்வந்த பசிஹர் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாக்குசாவடி ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார்.