காரால் மோதி என்னை கொல்ல முயற்சி: மம்தா
கொல்கத்தா: பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு கார் தனது கார் மீது மோத வந்ததாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவைத் திட்ட 1 மணியளவில் சால்ட்லேக் சிட்டி பகுதியில் மமதா பானர்ஜி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மமதா கூறியுள்ளார்.
இதுகுறித்து மமதா கூறுகையில், நான் எனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எனது பாதுகாப்பு வாகன வரிசைக்குள் ஒரு கார் ஊடுறுவியது. எனது கார் மீது மோதம் வேகத்தில் அது வந்தது.
அந்தக் காரில் 3 பேர் இருந்தனர். அவர்களில் இருவர் கேமராவுடன் இருந்தனர். கார் கண்ணாடியில் பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
தெருவில் விளக்கு கூட எரியவில்லை. இருட்டாக இருந்தது. முதல் முறை எனது கார் மீது அந்தக் கார் மோத வந்தபோது எனது கார் டிரைவர் சமாளித்து காரைத் திருப்பி விட்டார். இருந்தும் விடாமல் அந்தக் கார் கிட்டத்தட்ட ஐந்து முறை மோதுவதற்கு முயன்றது.
இதையடுத்து எனது பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அந்தக் காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் கார் நிற்காமல் போய் விட்டது. இதையடுத்து அந்தக் காரை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால் நான் அவர்களைத் தடுத்து விட்டேன்.
பின்னர் அந்தக் காரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். காரை ஓட்டிய டிரைவரிடம் முறையான டிரைவிங் லைசென்ஸ் இல்லை. மேலும் உள்ளே கேமராவுடன் இருந்த இருவரிடமும், பத்திரிக்கையாளர்களுக்கான அடையாள அட்டை எதுவும் இல்லை.
ஏன் அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்கள் எனது கார் மீது மோத வந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை இது போலீஸ் உளவுப் பிரிவினரின் காராக இருக்கக் கூடும் என்று போலீஸார் கூறலாம். அப்படியானால் இந்த நேரத்தில் எதற்காக என்னை உளவு பார்க்க வேண்டும். ஏற்கனவே எங்களுடன் போலீஸார் உள்ளனர். பிறகு எதற்கு இப்படித் துரத்த வேண்டும். நாங்கள் என்ன தீவிரவாதிகளா அல்லது குற்றவாளிகளா?.
என்னை கொல்லும் நோக்கத்துடன் அந்த கார் வந்தது என்றார் மமதா.
இதுகுறித்து மாநில டிஜிபி சுரஜித் கர் புரகயஸ்தா கூறுகையில், இதுகுறித்துப் புகார் வந்துள்ளது. இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸின் மேற்கு வங்க மாநில தலைவர் சுப்ரதா பக்ஷி மற்றும் மத்திய இணை அமைச்சர் முகுல் ராய் ஆகியோர் கூறுகையில், இவர்கள் கூலிப் படையினர், மமதாவைக் கொல்ல வந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.