ராகுல் டீ குடித்த கடை-மூட பஞ்சாயத்து உத்தரவு!
சமீபத்தில் ராகுல் காந்தி கேரளாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக கோழிக்கோடு வந்திருந்தார். அப்போது அங்குள்ள ஆலிவ் ரெஸ்டாரன்ட் என்ற ரெஸ்டாரென்ட்டுக்கு அவர் போனார்.
அங்கு மதிய சாப்பாட்டை சாப்பிட்ட ராகுல், டீயும் குடித்தார். சாப்பாடு அருமையாக உள்ளது என்று எழுதிக் கொடுத்த அவர், ஒன்றுக்கு இரண்டு டீயாக வாங்கிக் குடித்தார். பின்னர் கிளம்பிச் சென்றார். இதனால் அந்த டீக்கடை உரிமையாளர் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஹோட்டலும் பிரபலமாகி விட்டது.
ஆனால் எல்லாம் இப்போது புஸ்வாணமாகி விட்டது. காரணம்- இந்த ஹோட்டலில் சுகாதாரம் இல்லை, குடிநீர் அசுத்தமாக இருப்பதாக கூறி ஒரு வாரத்திற்கு ஹோட்டலை மூடுமாறு உள்ளூர் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளாம். மேலும், விசாரணைக்கும் வர வேண்டும் என ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பஞ்சாயத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேஷ் என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாகவே இந்த ஹோட்டலில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை. இதை தொடர அனுமதிக்க முடியாது. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
ஆனால் ராகுல் காந்தி வந்த பின்னர் ஏன் இந்த நடவடிக்கை. முன்பே இப்படி ஒரு நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று புகார் எழுந்துள்ளது.
ஆனால் காங்கிரஸார் சிலரே ஹோட்டலை மூடியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம். அவர்கள் கூறுகையில், எங்களது தலைவருக்கு எப்படி சுகாதாரமற்ற தண்ணீரை கொடுக்கலாம். ஹோட்டலை மூடியது சரிதான் என்கிறார்கள் அவர்கள்.
ராகுல் காந்தி வந்து சாப்பிட்டு டீ குடித்து விட்டுப் போனதால் ஒரு ஹோட்டல் காலியானதுதான் மிச்சம். இதுதான் இன்று கேரளாவில் பரபரப்பாக உள்ளது.
பாக் பற்றி பேச ஏதுமில்லை:
இந் நிலையில் ஹிமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்திய தேசிய மாணவர் அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிம்லா வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவமும், அந்நாட்டைப் பற்றி அதிக நேரம் பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். இது தேவையற்ற ஒன்று.
பாகிஸ்தான் குறித்து பேசுவதற்கு 5 நிமிடத்தைக்கூட நான் ஒதுக்கமாட்டேன். ஏனென்றால் அந்நாட்டைப் பற்றி பேசுவதற்கு அங்கு ஒரு சிறப்பும் இல்லை.
இந்தியாவுக்கென்று உலக அளவில் தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு. உலக விவகாரங்களில் முக்கிய பங்களிக்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
இந்தியாவின் ராஜதந்திரக் கொள்கையில் பாகிஸ்தானால் சிறிய இடத்தையே பிடிக்க முடியும். எந்த ஒரு விஷயத்திலும் இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிடவே முடியாது.
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் உள்ள பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது உலகறிந்த விஷயம். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் போதுமான ஆதாரம் அந்நாட்டிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நாடு இதுவரை உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை.
மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியாவின் சிறப்பான ராஜதந்திர அணுகுமுறையால் அந்நாட்டின் மீதான உலகப் பார்வை மாறியுள்ளது என்றார் ராகுல் காந்தி.