மழைக்கு முன் மறு குடியமர்த்தல் இல்லை-இலங்கை
கொழும்பு: மழைக்காலத்துக்கு முன்பே தமிழர்களை மறு குடியமர்த்துவது இயலாத காரியம் என இலங்கை தெரிவித்துள்ளது.
வன்னி தடுப்பு முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுடான போர் முடிந்ததாக அறிவித்த இலங்கை அரசு முகாம்களில் உள்ள தமிழர்களை 180 நாட்களுக்குள் மறுகுடியமர்த்தி விடுவோம் என கூறியிருந்தது.
ஆனால் இப்போது போர் முடிந்து 150 நாட்களாகி விட்டது. இன்னும் மறுகுடியமர்த்தலை சரிவர மேற்கொள்ளாமல் உள்ளது இலங்கை அரசு.
தற்போது பருவ மழை நெருங்கி வருகிறது. இதனால் முகாம்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. மழை வந்து விட்டால் நோய்கள் அதிகரித்து விடும், பெரும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நியூயார்க்கைச் சேர்ந்த ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளது.
ஆனால் மழைக்காலத்துக்குள் இடம் பெயர வைப்பது இயலாத காரியம் என அந்த நாட்டு மனித உரிமைத் துறை அமைச்சர் ராஜீவ் விஜயசிங்க கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போது பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது முகாம்களின் நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலத்திற்குள் இங்குள்ளவர்கள் அனைவரையும் மறு குடியமர்த்துவது இயலாத காரியம் என்கிறார்.