புலிகள் கூட்டம்: நார்வேவுக்கு இலங்கை கண்டனம்
கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்தக் கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தி்ல் நாடுகடந்த தமிழீழ அரசை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந் நிலையில் இலங்கைக்கான நார்வே தூதர் டோர் ஹாட்டரெம்மை இன்று தனது அலுவலகத்துக்கு அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா, இந்தக் கூட்டத்தை ஆஸ்லோவில் நடத்த அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் இது போன்ற கூட்டங்கள் எதிர்காலத்தில் நடக்க அனுமதிக்கப்பட்டால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். புலிகளின் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கும் இது போன்ற கூட்டங்கள் இலங்கையின் இறையாண்மைக்கு முரணானவை என்றும் நார்வேயிடம் ரோகித தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நார்வே தூதர், தனி நாடு கோரிக்கையை தனது நாடும் ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் இலங்கையின் கவலையை நார்வே பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்ததாக இலங்கை வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.