செளதி: 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ரியாத்: சௌதி அரேபியாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த இரண்டு மனித வெடிகுண்டு தீவிரவாதிகளை போலீஸார் சுட்டு கொன்றனர். மேலும் ஒருவரை கைது செய்தனர்.
அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மனித வெடிகுண்டு ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெட்டா நகரில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உள்துறை இணை அமைச்சரும், இளவரசருமான முகமது பின் நையப் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சௌதி போலீஸார் அல் கொய்தா தீவிரவாதிகளை விரட்டி பிடித்து வருகின்றனர். கடந்த வாரம் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய 44 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் சௌதியில் மேலும் சில இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பல இடங்களில் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜிசான் நகரில் இருந்து அசிர் மாகாணத்துக்கு செல்லும் வழியில் 120 கிமீ தொலைவில் உள்ள சோதனை சாவடியிலிருந்த போலீஸார் ஒரு அந்தபக்கமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஆண் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்களை பெண் போலீஸார் ஒருவர் சோதனையிட்ட போது அவர்கள் இருவரும் பெண்கள் அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பெண் வேடமிட்டு வந்த தீவிரவாதிகள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். இந்த சண்டையின் போது போலீஸார் ஒருவரும் பலியானார்.
பலியான இரண்டு தீவிரவாதிகளும் மனித வெடிகுண்டுகள் என்றும், அவர்கள் தங்களது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டி வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த காரில் இருந்து வெடிகுண்டுகள், தானியங்கி ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
போலீஸார் பிடிபட்ட தீவிரவாதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சௌதி அரேபியா பகுதியில் மீண்டும் அல் கொய்தாவினரின் அட்டகாசம் தொடர ஆரம்பித்திருப்பது வருத்தம் அளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.