அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்துக்கு அரசு ஒப்புதல்!
அஜீம் பிரேம்ஜி பெயரில் பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்கும் முயற்சி நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. முழுக்க முழுக்க தனியார் பல்கலைக் கழகமாக இது இயங்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை. ஆனால் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் எந்தப் பல்கலைக் கழகமும் அமைக்க முடியாது. எனவே இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருந்த இந்த முயற்சி, ஒரு வழியாக நேற்று நிறைவேறியது.
இந்தப் பல்கலைக் கழகம் தனியார் கல்வி அமைப்புதான் என்றாலும், அரசின் கட்டுப்பாடு நிச்சயம் இருக்கும். அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக சட்டம் 2009 -ன் படி இந்த பல்கலைக் கழகம் உருவாகிறது.
பெங்களூருவில் அமையும் இப்பல்கலைக் கழகம், மாநிலத்தில் உள்ள பள்ளிக் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும்.
அரசுப் பள்ளிகளின் ஆசிரியைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கும். கல்வியியல் பட்டப் படிப்புகள், தொழில் நுடபத் துறைப் படிப்புகள் இங்கு கற்றுத் தரப்படும். கர்நாடக மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இப்பல்கலைக் கழகத்தின் கட்டண விகிதங்கள், சேர்க்கை விதிமுறைகளை மேற்பார்வை செய்வது, தேவைப்படாடால் திருத்தும் அதிகாரம் போன்றவை மாநில அரசிடம் இருக்கும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என விப்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.