எங்கே எனது கடிதம்?-எஸ்எம்எஸ்ஸில் கேளுங்கள்!
சென்னை: விரைவு தபாலில் (ஸ்பீடு போஸ்ட்) அனுப்பும் கடிதங்கள் எந்த வழியாக செல்கின்றன, எந்த நகரில் உள்ளன? போன்ற விவரங்களை அறிய இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்.
தபால்துறை இதற்கான வசதியை செய்து தருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு தபால் துறை சர்கிள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மூர்த்தி (வர்த்தக மேம்பாடு) மற்றும் ராமச்சந்திரன் (கடிதம்) ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 9-ந் தேதி அஞ்சல் தினத்தை கொண்டாடினோம். அன்று முதல் சேமிப்பு தினம், மெயில்ஸ் டே, அஞ்சல் தலை சேமிப்பு நாள், வர்த்தக மேம்பாட்டு நாள், போஸ்டல் இன்சூரன்ஸ் தினம் என்று ஒருவாரம் கொண்டாடுகிறோம்.
கடிதம் இருக்கும் இடம் தெரிய எஸ்எம்எஸ்...
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த சூழ்நிலையில் இன்லேன்ட் கடிதங்கள், மடல்கள் அனுப்புவது மிகவும் குறைந்துள்ளது. ஆனால் வியாபார ரீதியான கடித போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ளது.
சில சமயங்களில் ஸ்பீடு போஸ்டுகளில் வாடிக்கையாளர்கள் தவறான விலாசத்தை அளிக்கும் போது தாமதமாகி விடுகிறது. 96 முதல் சதவீத ஸ்பீடு போஸ்டு தபால்கள் குறித்த நேரத்தில் சென்று விடுகின்றன.
ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பப்படும் தபால்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்கு 55352 என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் 'எஸ்பி' என்று டைப் செய்து ஸ்பீடு போஸ்ட் செய்த குறியீட்டு எண்ணையும் (13 இலக்க எண்) அனுப்ப வேண்டும். உடனடியாக, அந்த தபால் எங்கே இருக்கிறது? என்ற தகவலைப் பெறலாம்", என்றனர்.