தாய்-மகன் கொலை: தவறான தகவல்..துப்பறியும் நிறுவன ஊழியர் கைது
சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அனந்தலட்சுமி. இவரது கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அனந்தலட்சுமியும், அவரது 13 வயது மகன் சூரஜூம் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவரது செல்போன் மற்றும் நகைகள் திருடு போயிருந்தன.
இந்தக் கொலை வழக்கில் அனந்தலட்சுமி குடும்பத்ததுக்குப் பழக்கமான வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலா, உதயராஜ் ஆகியோரை கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.
மேலும் வேல்முருகனின் காதலி தன்யாவும் கேரளாவில் பிடிபட்டார்.
இந் நிலையில் ஒரு வாரப் பத்திரிகையில், இரட்டைக் கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். உண்மையான குற்றவாளி யார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக செய்தி வெளியானது.
இதையடுத்து துணை கமிஷனர் சம்பத்குமார் தலைமையில் இது குறித்து விசாரணை நடந்தது. விசாரணையில் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் இந்த தவறான தகவலை கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர் கிருஷ்ணகுமார், அவரது நண்பர் செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த இரட்டைக் கொலை பற்றி விசாரணை நடத்தினோம். ஆனால் எங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து எங்களுக்கு கண்டுபிடிக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் கொலையாளி பற்றி வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறினோம். அதனை நம்பி அவர் இந்த தகவலை வார பத்திரிகைக்கு தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.