இலங்கையில் வாழவே முடியாது, காப்பாற்றுங்கள்- தமிழ்ச் சிறுமியின் கதறல்
இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிட்டத்தட்ட 300 பேர் தப்பிச் சென்றனர். ஆனால் அவர்களை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.
இந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏபிசி டிவி ஒளிபரப்பியுள்ளது.
சிறுமி பிருந்தா கூறுகையில், உலக அரசுகளே உங்களது கதவுகளை எங்களுக்காக திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, தயவு செய்து எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
அய்யா, தயவு செய்து எங்காவது அழைத்துச் செல்லுங்கள். அது ஆஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது என்று கண்களில் நீர் வழிய அந்த சிறுமி உருக்கமாக கூறியுள்ளார்.
மிகவும் சிறிய கப்பலான (பெரிய படகு என்றுதான் சொல்ல வேண்டும்) அதில் கிட்டத்தட்ட 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் இதுபோல புகலிடம் கோரி வருவோருக்காக (பெரும்பாலும் ஈழத் தமிழர்கள்) செய்யப்பட்டுள்ள வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 1200 பேர் மட்டுமே தங்கக் கூடிய வசதி முன்பு இருந்தது. தற்போது மேலும் 280 தற்காலிக படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1400 பேருக்கும் மேல் தங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை நோக்கி அகதிகளாக வருவோர் இங்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு முறையான விசாரணைக்குப் பின்னர் புகலிடம் கோருவற்கான காரணங்கள் முறையாக இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். இல்லாதவர்கள் இங்கேயே தடுத்து வைக்கப்படுகின்றனர்.
தற்போது இந்த தடுப்பு முகாமில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மேலும் பல தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருகிறதாம்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 1650 தமிழர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 1305 பேர் தற்போது இந்த தீவில் வைக்கப்பட்டுள்ளனர்.