அமர் சிங்-மனைவி மீது ரூ. 500 கோடி மோசடி புகார்
அமர்சிங் மற்றும் அவரது மனைவி பஜ்கஜ குமாரி சிங் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 500 கோடி கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளரான அமர் சிங், பெரும் கோடீஸ்வரர். இவர் தன் பெயரிலும் தனது மனைவி பெயரிலும் நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
அனில் அம்பானி, அமிதாப்பச்சன் உள்ளிட்டோருக்கும் மிக நெருக்கமானவானரான அமர் சிங், தொழில், அரசியல், சினிமா உள்பட பல துறைகளிலும் கால் பதித்தவர்.
இந் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பாபுபூர்வா காவல் நிலையத்தில் சிவ்காந்த் திவாரி என்பவர் தந்த புகாரின்பேரில் அமர் சிங் மற்றும் அவரது மனைவி மீது ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், அமர் சிங்கும் அவரது மனைவியும் தங்களது நிறுவனங்களில் பெரும் நிதி முறைகேடுகள் செய்துள்ளனர். நிறுவனங்களை இணைப்பதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கியுள்ளனர்.
2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இவர்கள் செய்த முறைகடுகளால் ரூ. 500 கோடி வரை மோசடி செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
பங்கஜ ஆர்ட் அண்ட் கிரெடிட் லிமிடெட், ஈஸ்டர்ன் இந்தியா கம்பெனி, சர்வோட்டம் கேப் லிமிடெட், எனர்ஜி டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட், இடிசிஎல் பவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த கருப்புப் பண மோசடி நடைபெற்றுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
இந்த 14 பக்க எப்ஐஆரில் அமிதாப்பச்சனின் பெயரும் உள்ளது. அமர்சிங்கின் ஒரு நிறுவனத்தில் அவரும் இயக்குனராக உள்ளதால் அவரது பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு, பணப் புழக்க சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரிஜ்லால் கூறினார்.
அமர்சிங்கு அனில் அம்பானிக்கு நெருக்கமாக இருப்பதால் முகேஷ் தரப்புடன் அவருக்கு மோதல் இருந்து வருகிறது. முலாயம் சிங்குடன் இருப்பதால் முத்லவர் மாயாவதியுடனும் அவருக்கு மோதல் இருந்து வருகிறது. மேலும் அமிதாப்புடன் நெருக்கமாக இருப்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கும் அமர் சிங்குக்கும் எப்போதும் ஆகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.