என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு அதி நவீன ஆயுதங்கள்
மனீசர் (ஹரியாணா): என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினருக்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹரியாணா மாநிலம் மனீசர் நகரில் நடந்த என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் தீவிரவாத மிரட்டல்களை சந்திக்க இந்தியா எப்போதும் தயார். இதற்காக என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினருக்கு உதவுவதற்காக அதி நவீன ஆயுதங்கள், ஹைடெக் சாதனங்கள் வாங்கப்படும்.
வரும் நாட்களில் என்.எஸ்.ஜி. படையினர் மிக நவீன படையினராக மாறுவார்கள்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையினர் செய்த உயரிய தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது.
மேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன், ஹவில்தார் கஜேந்திர சிங் மற்றும் ஒட்டுமொத்த படையினரின் தீரத்தையும், தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றார் ப.சிதம்பரம்.
தக்க பதிலடி கொடுப்போம்...
இதற்கிடையே, இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா விடுத்துள்ள மிரட்டல் குறித்து ப.சிதம்பரம் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
மும்பையைப் போல் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுப்போம். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திறன் பாகிஸ்தானிடம் இல்லை என்றார்.