நானும் தந்தையை இழந்தவன்-ராகுல் உருக்கம்
ராஞ்சி: உங்களைப் போலவே நானும் எனது தந்தையை இழந்தவன்தா என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினரிடம் கூறி ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்துவாரின் மனைவி மற்றும் குழந்தைளை சந்தித்து ஆறுதலாகப் பேசினார். இதனால் இந்துவாரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்துவாரின் மனைவி சுனிதா கூறுகையில், ராகுல் காந்தியின் வருகையால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனது குழந்தைகளிடம் ராகுல் காந்தி பேசுகையில், தானும் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவன்தான் என்று கூறி ஆறுதல் படுத்தினார்.
நானும் எனது தந்தையை ஒரு குண்டுவெடிப்பில் பறிகொடுத்தவன்தான் என்று கூறினார் ராகுல் என்றார்.
இந்துவாரின் மகன்கள் அபிஷேக், மனீஷ் ஆகியோர் கூறுகையில், நாங்கள் எப்படிப் படிக்கிறோம், எங்களது பள்ளி, ஆசிரியர்கள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். தனது தந்தைக்கும், எங்களது தந்தைக்கும் நடந்தது குறித்து விளக்கினார் என்றனர்.
மனீஷ், ராகுலிடம் பேசுகையில், நான் வளர்ந்து பெரிய போலீஸ் அதிகாரி ஆவேன். அப்போது எனது தந்தையைக் கொன்ற நக்சலைட்டுகளை ஒழிக்க போராடுவேன் என்று கூறினான்.