அணை: தமிழகத்துக்கு பதிலடி தருவோம்-கேரளா
முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு (தேக்கடி அணை) அருகே புதிய அணை கட்ட கேரளம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு நடத்த தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் வழக்கையும் மீறி மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 13ம்ம் தேதி முதல் கேரளம் ஆய்வுப் பணியை நடத்தி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடன் பேசுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிரேமசந்திரன் தலைமையில் நடந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை நிபுணர்கள் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அமைச்சர், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி தமிழகத்துடன் பேசலாமா என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.