தீபாவளி: நிரம்பி வழிந்த ரயில்-பஸ்கள், பயணிகள் திணறல்
தீபாவளியையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல அரசுப் போக்குவரத்து கழகங்களும் 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன. ஆனாலும் அவை போதுமானதாக இல்லை.
இதனால் ரயில்களில் முன்பதிவு இல்லாத அன்-ரிசர்வ்ட் பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறிச் சென்றனர்.
அதே போல பேருந்துகளில் பல நூறு கி.மீ. தூர பயணம் என்றாலும் ஏராளமான பயணிகள் நின்றபடியே சென்று வருகின்றனர்.
இப்படிச் செல்லவும் கூட இடம் கிடைக்காத ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் தவித்தனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் பயணிகள் தவித்து வருவதைக் காணவே கஷ்டமாக இருந்தது.
இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி பயணிகளை பிழிந்தனர். பல மடங்கு பணம் கொடுக்கத் தயாராக இருந்தாலும் கூட இந்த பஸ்களிலும் சீட் இல்லாத நிலை நிலவியது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகர்கள் அனைத்திலும் இதே நிலை தான் நிலவியது.
நிரம்பி வழிந்த கடை வீதிகள்:
அதே போல தீபாவளிக்கு துணிமணிகள், பட்டாசுகள், உணவுப் பொருட்கள் வாங்க முக்கிய வணிகப் பகுதிகளிலும் மக்கள் குவிந்தனர்.
சென்னையில் தி.நகர், பூக்கடை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளமாகவே காட்சியளித்தது. இதனால் இப் பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விலைகள் கடும் உயர்வு:
இந் நிலையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக சர்க்கரை, வெல்லம், கடலை பருப்பு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றினி விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.