கல்லூரி விடுதியில் மோதல்-3 பேர் மண்டை உடைப்பு
நெல்லை: பாளையங்கோட்டை அரசு விடுதியில் கல்லூரி மாணவர்களிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் மண்டை உடைந்தது.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அம்பேத்கார் அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதி அறைகள் உள்ளன. இதில் சுமார் 105 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று மாலை விடுதி சுவற்றில் குறிப்பிட்ட ஒரு ஜாதியின் பெயரை எழுதி வாழ்க என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த வேறு சில மாணவர்கள் அதை எழுதியது யார், எதற்கு எழுதப்பட்டது என சில மாணவர்களிடம் கேட்டு தகராறு செய்தனர்.
அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதைப் பார்த்த மாணவர்கள் சக்திவேல், ரஞ்சித், அப்பாத்துரை, ஆகிய 3 பேரும் இரண்டு தரப்பையும் விலக்கி சாமாதனம் செய்தனர். அப்போது ஒரு கும்பல் சாமாதானம் செய்த மாணவர்களை உருட்டு கட்டையால் தாக்கியது.
இதில் அவர்களது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ரத்த வெள்ளத்தில் துடித்த 3 மாணவர்களையும் பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
படுகாயமடைந்த மாணவர் சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் மேலகரம்பையை சேர்ந்தவர். மாணவர் ரஞ்சித்துக்கு கயத்தாறு அருகேயுள்ள வேப்பங்குளம் கிராமம். அப்பாததுரைக்கு மூலக்கரைப்பட்டி ஆகும். இவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.