காஷ்மீர் கி்ரிக்கெட் வீரர் பையில் வெடிகுண்டு!-பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் பரபரப்பு
ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் 22 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் லீக் போட்டிக்காக பெங்களூர் வந்துள்ளது. இந்த அணியினர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தங்கியுள்ளனர்.
இந் நிலையில் நேற்று காலை ஸடேடியத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டு டிடெக்டர் அபாய எச்சரி்க்கை செய்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஸ்டேடியத்தின் கிழக்குப் பகுதியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் கிளப் ஹவுசில் தான் இந்த வெடிமருந்து இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த அறைகளில் ஜம்மூ-காஷ்மீர் அணி தங்கியிருந்தது. இதையடுத்து மோப்ப நாய்களுடன் அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அறை எண் 105ஐ முற்றுகையிட்டனர்.
அதில் பர்வேஸ் ரசூல், மெஹ்ராஜூதீன் ஆகிய வீரர்கள் தங்கியிருந்தனர். இதில் வெடிகுண்டு நிபுணர்களின் டிடெக்டர்கள் பர்வேஸின் பையில் ஆர்டிஎக்ஸ் இருந்ததற்கான தடயம் இருப்பதாகத் தெரிவித்து அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கூடவே மெஹ்ராஜூதீனையும் விசாரணைக்கு அழைத்தனர்.
இதற்கு ஜம்மூ-காஷ்மீர் அணி வீரர்களும் நிர்வாகிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் அவர்களிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து போதிய ஆதாரம் ஏதும் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் அவர்களது பைகள் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை முடிவுகள் வரும் வரை இருவரும் பெங்களூரை விட்டுச் செல்லக் கூடாது என்று பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் சங்கர் பி்த்ரி உத்தரவிட்டுள்ளார்.
இவர்களது பைகளில் எப்போதோ வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ஆர்டிஎக்ஸ் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆர்டிஎக்ஸ் இருந்த பையுடன் இந்தப் பை ஒட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.