சோமாலியாவில் 4 இந்தியர்களுடன் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்
கம்பாலா: சோமாலியா அருகே 4 இந்தியர்கள் உள்ளிட்டோருடன் சென்ற சிங்கப்பூர் சரக்குக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். கப்பல்களைக் கடத்தி பொருட்கள், பணம், உணவை கொளையடிப்பது, கப்பலையும் அதில் உள்ளவர்களையும் விடுவிக்க பல மில்லியன் டாலர்கள் கேட்டு மிரட்டுவது, பணததைத் தராவிட்டால் அதில் உள்ளவர்களைக் கொல்வது, கப்பல்களை சிதறடிப்பது என இந்த கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் மிக அதிகமாகி வருகிறது.
இதனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இப் பகுதியில் தங்களது கடற்படை ரோந்துக் கப்பல்களை நிறுத்தியுள்ளன.
இந் நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த எம்.வி.கோடா வஷீர் என்ற சரக்கு கப்பல் செஷல்ஸ் தீவுக்குச் சென்று கொண்டிருந்தது.
3 தினங்களுக்கு முன் சோமாலியா அருகே சென்றபோது கடற் கொள்ளையர்கள் கப்பலில் ஏறி அதை கடத்தினர்.
அதில் மொத்தம் 22 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 4 பேர் இந்தியர்கள். கடத்தல்காரர்கள் பணம் கேட்டு கோரிக்கை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.