அத்தியாவசியப் பொருட்கள்-மத்திய அமைச்சரவை குழு ஆய்வு
டெல்லி: அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு, விலைகள் நிலவரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
விலைகள் தொடர்பான அமைச்சரவைக் குழு இந்த ஆய்வை நடத்தியதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
வழக்கமான அடிப்படையில் பொருட்களின் விலையை அரசு கண்காணித்து வருகிறது என்றும், பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் உணவு நிலவரம் தொடர்பாக விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உணவு மற்றும் வேளாண் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மஞ்சள் விலை கடும் உயர்வு:
இந் நிலையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.9,300 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
மஞ்சள் சாகுபடியில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக 1,200 ஹெக்டேரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.
மே மாதம் வரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5000க்கும் குறைவாகவே இருந்த மஞ்சள் விலை, இப்போது ரூ. 9,300யை தொட்டுள்ளது.