ஆந்திரா: பெண் எம்எல்ஏ டார்ச்சர்-பெண் அதிகாரி தற்கொலை
ஹைதராபாத்: பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த நெருக்கடி தாங்க முடியாமல், விவசாயத்துறையைச் சேர்ந்த பெண் இளம் பெண் அதிகாரி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட அந்த அதிகாரியின் பெயர் ராஜேஸ்வரி. 26 வயதே ஆனவர். நான்கு நாட்களுக்கு முன்பு இவர் தீக்குளித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆந்திர மாநில சிறுதொழில்துறை அமைச்சர் டி.கே.அருணா கூறுகையில், இந்தப் பெண் அதிகாரியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவர்கத்ரா மண்டல விவசாய அதிகாரியாக இருந்து வந்தார் ராஜேஸ்வரி. தனது மரணத்திற்குக் காரணம், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சீதா தயாகர் ரெட்டி மற்றும் இரண்டு மாவட்ட மற்றும் மண்டல அளவிலான மக்கள் பிரதிநிதிகளே காரணம் என அவர் மரணத்திற்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேவர்கத்ரா தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏவாக சீதா இருக்கிறார். உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அருணா.
அக்டோபர் 15ம் தேதி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராஜேஸ்வரி, மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். 60 சதவீதத்திற்கும் மேலான தீக்காயத்துடன் இருந்த அவர் நிலைமை மோசமாக இருந்தது.
தனது குடும்பத்தினரிடம் ராஜேஸ்வரி பேசுகையில், எம்.எல்.ஏவும், இரண்டு மக்கள் பிரதிநிதிகளும் என்னை மன ரீதியாக சித்திரவதை செய்து வருகின்றனர். இதனால் நான் தற்கொலை முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் சீதா தயாகர் ரெட்டி இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராஜேஸ்வரியை எந்த வகையிலும் சித்திரவதை செய்யவில்லை. விவசாயிகளுக்கு உதவ என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே அவரிடம் கேட்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.
முன்பு இப்படித்தான் வங்கி அதிகாரி ஒருவரை காங்கிரஸ் எம்.பி. பளார் பளாரென அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது தெலுங்கு தேசம் பெண் எம்.எல்.ஏ ஒருவர் சித்திரவதைப்படுத்தியதால் பெண் அதிகாரி தற்கொலை வரை போயுள்ளதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.