5 வயது சிறுவன் சித்திரவதை: மக்கள் கல்வீச்சு-தந்தையிடம் விசாரணை
சென்னை: வீட்டில் அடைத்து வைதது சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டனர். அவனது தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் ஒரு வீட்டில் ஐந்து வயது சிறுவனை கடந்த 6 மாதமாக அடைத்து வைத்து சூடுபோட்டு சித்திரவதை செய்து வருவதாக அப் பகுதியில் வசிப்பவர்கள் புகார் கூறினர்.
மேலும் சிறுவனை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்கள் கதவைத் திறக்காததல் அந்த வீட்டின் மீது கல் வீச்சிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்தத போலீசார் அங்கு விரைந்தனர். வீட்டில் இருந்த வெங்கடேஷ் (5) என்ற அந்த சிறுவனை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அவனது உடல் முழுவதும் வெட்டு, தீக் காயங்களாக உள்ளன. ஏதும் பேச முடியாத நிலையில் அந்தச் சிறுவன் உள்ளதால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறுவனின் தந்தையிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குழந்தையின் தாய் பிரிந்து வாழ்கிறார். வெங்கடேசும் அவனது தம்பியும் தந்தையிடம் வளர்ந்து வருகின்றனர்.
சிறுவனின் நிலை குறித்து அவனது தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.