லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் பெக்காமை தடுத்து சோதனையிட்ட அதிகாரிகள்
லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது உடமைகள் சோதனையிடப்பட்டன.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெக்காம். 34 வயதாகும் பெக்காம், வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை முழுமையாக சோதனையிட ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சோதனை நடந்ததால் பெரும் அதிருப்திக்குள்ளானார் பெக்காம். எரிச்சலைடந்தார். தனது அமெரிக்க ஏஜென்டுகளைத் தொடர்பு கொண்டு நான் வெளியேற வேண்டும், ஏதாவது செய்யுங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுள்ளார். ஆனாலும் அவர்களாலும் பாதுகாப்பு சோதனையிலிருந்து பெக்காமை மீட்க முடியவில்லை.
அக்குவேறு ஆணி வேறாக பெக்காமின் உடமைகளை சோதனையிட்டு முடித்து விட்டுத்தான் அதிகாரிகள் அவரை வெளியேற அனுமதித்தனர்.
தனது மனைவியும், முன்னாள் ஸ்பைஸ் கேர்ளுமான விக்டோரியா பெக்காம் மற்றும் 2 மகன்களுடன் சில காலமாக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் பெக்காம்.
அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்துக் கிளப்பான லாஸ் ஏஞ்சலெஸ் கேலக்ஸிக்காக அவர் ஆடி வருகிறார். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
இந்தியாவில் பிரபலமான ஷாருக் கானை சமீபத்தில் நியூயார்க் விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வறுத்து எடுத்தது இந்தியாவில் பரபரப்பான செய்தியானது. ஆனால் உலகறிந்த ஒரு கால்பந்து நட்சத்திரத்தையும் அமெரிக்க அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வெறுப்படித்துள்ள சமாச்சாரம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.