கொழும்பு விமான நிலையத்தில் 29 தமிழ் இளைஞர்கள் கைது
கடந்த வியாழக்கிழமை காலை 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பு கட்டுநாயகே விமான நிலையம் வழியாக சிங்கப்பூர் சென்றனர். ஆனால், இவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க அந்த நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து அன்று இரவு மீண்டும் அவர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்த அவர்களை உளவுப் பிரிவு போலீஸார் கைது செய்து கட்டுநாயகே காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதேபோல வெள்ளிக்கிழமை 18 தமிழ் இளைஞர்கள் (அனைவரும் மாணவர்கள்) லண்டன் செல்ல வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை உளவுப் பிரிவு போலீஸார், அவர்களைக் கைது செய்தனர்.
18 பேரும் லண்டனில் படிப்பதற்குத் தேவையான முறையான மாணவர் விசாக்களை வைத்திருந்தபோதிலும் கூட அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் கட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்தில், உளவுப் பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் குவிக்கப்பட்டு தமிழர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.