மாணவனை அடித்துக் கொன்ற ஈவ் டீசிங் மாணவர் கும்பல்
செய்யாறு: கல்லூரியில் மாணவிகளை ஈவ் டீசிங் செய்த மாணவர்களை தட்டிக் கேட்ட மாணவன் அடித்துக் கொல்லப்பட்டான்.
செய்யாறு அரசுக் கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர் சரவணன் (23).
கடந்த 15ம் தேதி கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளை ஒரு பிரிவு மாணவர்கள் கேலி செய்ததை சரவணன் மற்றும் அவரது நண்பர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தட்டிக் கேட்டனர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்த மாணவர்கள் சரவணனையும் லட்சுமி நாராயணணையும் கடுமையாகத் தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த சரவணன் 16ம் தேதி இறந்தார். இந் நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை கல்லூரி திறக்கப்பட்டதும் சரவணன் இறந்த செய்தி பரவியது.
இதையடுத்து அவரைத் காக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இன்று காலை கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செய்யாறு-ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் வந்து மாணவர்களிடம் சமரச பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.