எல்டிடிஇ-தம்பியண்ணாவுக்கு ஒரு ஆண்டு சிறை
ராமேஸ்வரம்: அலுமினியக் கட்டிகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான தம்பியண்ணாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக ராமேஸ்வரம் வழியாக கடத்த முயன்ற 3 டன் எடையுள்ள அலுமினிய கட்டிகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ச்சியாக 4 மாதங்களில் சுமார் 10 டன் அலுமினிய கட்டிகள் பிடிபட்டன. இந்த கடத்தல் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த அலுமினிய கட்டி கடத்தல் வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடல்புலிகள் பிரிவின் முக்கிய தளபதி தம்பியண்ணா என்ற டேனியல் (48) என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை தேடி வந்தனர்.
தம்பியண்ணா இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தம்பியண்ணா இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பி வந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பல பகுதிகளில் அவரை வலைவீசி தேடி வந்தனர்.
கடந்த 2008-ம் ஆண்டு தம்பியண்ணா சென்னையில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த போது சென்னை கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அலுமினியக் கட்டிகள் கடத்தல் வழக்கு நேற்று ராமேஸ்வரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தம்பியண்ணா ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிபதி குமரேசன், குற்றம் சாட்டப்பட்ட தம்பியண்ணாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார்.