கேரளாவின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு இடைக்கால தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்
இன்று சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் கோரிக்கை குறித்துப் பரிசீலித்த நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.
முன்னதாக மத்திய அரசு அளித்த அனுமதியின் நேற்று முதல் முல்லைப் பெரியாறு அணை புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு தொடங்கியது. இதை முதல்வர் கருணாநிதி கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு தொடர்ந்துள்ள முக்கிய வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், முகுந்தம் சர்மா, லோதா ஆகியோர் முன்னிலையில் வந்தது.
முதலில் கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அந்த மனுவில், கேரளா, தமிழக அரசுகள் பேச்சு நடத்தி அரசியல் ரீதியாக தீர்க்க வாய்ப்பு உள்ளது. பேச்சு நடத்துவதற்கு வசதியாக வழக்கை 2 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
உத்தரவை மீறியவர்கள் நீங்கள்...
இதை விசாரித்த பெஞ்ச், கேரளாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில்,
இதற்கு முன் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை மீறி விட்டீர்கள், நீர் மட்டத்தை உயர்த்தும் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக எழுத்து மூலம் எந்த உறுதிமொழியும் தரவில்லை. எனவே இப்போது கேரளாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறினர்.
பின்னர் கேரளா ஆய்வு நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள்,
கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஆய்வுப்பணி மேற் கொள்ள அனுமதி அளித்துள்ளதை வைத்து கேரளத்தில் புதிதாக அணை கட்டப்படும் என தமிழக அரசு பயப்பட தேவையில்லை. எனவே தமிழக அரசின் கோரிக்கைப்படி கேரளாவின் ஆய்வுப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது.
மேலும் கேரள அரசு சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அளிக்கப்பட்ட திட்ட விவரங்களை கேட்டுப்பெற தமிழக அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.